விதிமீறல் கட்டடங்கள் விவகாரம்: பொள்ளாச்சி நகராட்சிக்கு சிக்கல்
விதிமீறல் கட்டடங்கள் விவகாரம்: பொள்ளாச்சி நகராட்சிக்கு சிக்கல்
ADDED : ஜன 08, 2024 05:19 AM
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்தாண்டு, பொள்ளாச்சி நகராட்சியில் விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், 'இதுவரை, 69 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 488 அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும், 63 விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது' என, நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, 'உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால், மனுதாரர் மீண்டும் வழக்கு தொடரலாம்' என, கடந்த செப்டம்பரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடவடிக்கை எடுக்காத நிலையில், மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், நகராட்சி தரப்பில், அனுமதியில்லாத கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். 'இதே தகவல் கடந்தாண்டு செப்., 26ம் தேதி நகராட்சியால் தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. இது, அதிகாரிகளின் திறமையின்மையை காட்டுகிறது.
'விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயம் மறுபடியும் நீதிமன்றத்துக்கு வந்தால், தீவிரமாக கண்காணிக்கப்படும்' என, உயர்நீதிமன்ற நீதிபதி கண்டித்தார்.
இதற்கிடையே, 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களில், சீல் அகற்ற, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர், பல லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் தற்போது, ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள், தங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகியுள்ளனர்.
இதனால், 'கவனிப்பு' செய்தவர்கள், ஆளுங்கட்சி பிரமுகருக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர்.