சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
ADDED : ஏப் 25, 2024 11:29 AM

சென்னை: சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று (ஏப்.,25) நேரில் ஆஜராகினர்.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மணல் குவாரி ஒபந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட கலெக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் கலெக்டர் தங்கவேல், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது.
மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட கலெக்டர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆஜர்
இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், லோக்சபா தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 25ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டனர். அதன்படி, 5 கலெக்டர்களும் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

