சபரிமலையில் உடனடி வழிபாடு புஷ்பாபிஷேகம் படி பூஜை 2039 வரை முன்பதிவு
சபரிமலையில் உடனடி வழிபாடு புஷ்பாபிஷேகம் படி பூஜை 2039 வரை முன்பதிவு
ADDED : நவ 21, 2024 01:31 AM
சபரிமலை:சபரிமலையில் களபாபிஷேகத்துக்கும் முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பக்தர்கள் உடனடியாக செய்யும் வழிபாடாக புஷ்பாபிஷேகம் மட்டுமே உள்ளது. படி பூஜை 2039 வரை முன்பதிவு முடிந்துள்ளது.
சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசம், களபாபிசேகம், புஷ்பாபிஷேகம். இதில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் பக்தர்கள் உடனடியாக பதிவு செய்து நடத்தும் வசதி இருந்தது. இந்த ஆண்டு முதல் களபாபிஷேகமும் முன்பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பாபிஷேகம் மட்டுமே பக்தர்களால் உடனடியாக செய்யும் வழிபாடாக எஞ்சியுள்ளது.
படி பூஜைக்கான கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய். 2039 மார்ச் வரை முன்பதிவு முடிந்துள்ளது.
உதயாஸ்தமன பூஜை கட்டணம் 61 ஆயிரத்து 800 ரூபாய். இது 2029 அக்டோபர் வரை முன்பதிவு முடிந்துள்ளது.
சகஸ்ர கலச பூஜைக்கு கட்டணம் 91 ஆயிரத்து 250 ரூபாய். இது 2032 நவம்பர் வரை முடிந்துள்ளது.
களபாபிஷேக கட்டணம் 38 ஆயிரத்து 400 ரூபாய். 2025 மார்ச் வரை முன்பதிவு முடிந்து விட்டது.
தற்போது புஷ்பாபிஷேகம் மட்டுமே பக்தர்களுக்கு உடனடியாக செய்ய முடியும் வழிபாடாக உள்ளது. இதற்கான கட்டணம் 12 ஆயிரத்து 500 ரூபாய். வழிபாடு நடத்துபவர்கள் முன் வரிசையில் நின்று பூஜையின்போது சாமி கும்பிட முடியும்.