ADDED : ஜன 21, 2025 04:56 AM
சென்னை: சென்னையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமகோடி, 'மாட்டின் கோமியத்தை குடித்தால், காய்ச்சல் சரியாகும்' என தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பொன்முடி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர், அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், காமகோடி நேற்று அளித்த பேட்டி:
கோமியத்தை குடித்தால், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும். அதில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கூறுகள் உள்ளன.
இந்த கருத்தை உறுதிசெய்யும் விதத்தில், சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வு கட்டுரைகள் ஆதாரமாக உள்ளன. இக்கட்டுரைகளை படித்து பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.
மேலும், அமெரிக்காவில் ஒரு நிறுவனம், கோமியத்துக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அமேசான் போன்ற நிறுவனங்கள், 'ஆன்லைன்' முறையில், கோமியத்தை, 'பஞ்ச காவ்யம்' என்ற பெயரில் விற்பனை செய்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

