என்.ஆர்., நிறுவனத்தில் 3ம் நாள் வருமான வரித்துறை சோதனை
என்.ஆர்., நிறுவனத்தில் 3ம் நாள் வருமான வரித்துறை சோதனை
ADDED : ஜன 09, 2025 07:24 PM
ஈரோடு:ஈரோடு, அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராமலிங்கம். இவருக்கு சொந்தமாக, என்.ஆர்., கட்டுமான நிறுவனம், டோல் பிளாசா, திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இவரது நிறுவனத்தால் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நெருங்கிய உறவினரான இவரது ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர் திருமண மண்டபம், முள்ளாம்பரப்பில் செயல்படும் ஆர்.பி.பி., கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் கடந்த, 7ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.
அம்மாபேட்டை அடுத்த பூனாச்சியில் உள்ள ராமலிங்கத்துக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும், 7ம் தேதி முதல் சோதனை நடக்கிறது. இந்த இடங்களில் மூன்றாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.