பத்திரப்பதிவுக் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
பத்திரப்பதிவுக் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
ADDED : நவ 02, 2024 04:39 PM

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 20 என இருந்த நிலையில் அது , தற்போது ரூ. 100, 200, 500 என பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ. 20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 200 வரை அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஏற்கனவே இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 தமிழக பதிவுத்துறையினால் சட்டசபையில் திருத்தப்பட்டு கடந்த மே 3, 2024 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி 24 வகைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன்படி 10 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, சொத்தின் சந்தை மதிப்பும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த உயர்வை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும், அதை தமிழக அரசு திரும்பப் பெறாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. இத்தகைய கட்டண உயர்வுகளின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.