ADDED : பிப் 19, 2025 12:08 AM
சென்னை:ரயில் பாதைகள் மின்மயமாகி வருவதால், கடந்த, 12 மாதங்களில் மட்டும், 1,163 மின்சார ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் கருதி, ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன.
மின்பாதை துாரம் அதிகரித்து வருவதால், மின்சார ரயில் இன்ஜின்கள் தயாரிப்பையும் ரயில்வே அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து மண்டலங்களில் உள்ள ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என்ற இலக்கை நோக்கி, ரயில்வே செயல்பட்டு வருகிறது.
இதனால், செலவு குறைவதுடன், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படும். 100 சதவீதம் மின்மயமாக்கல் ஆகும் போது, எரிபொருள் செலவை, 60 சதவீதம் குறைக்க முடியும்.
ரயில்வேயில் மின் பாதைகள் துாரம் அதிகரித்து வருவதால், மின்சார ரயில் இன்ஜின்களில் தேவை அதிகரித்து உள்ளது.
அதன்படி, 2024 ஜனவரி முதல் கடந்த மாதம் வரை, 1,163 மின் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது, 10.5 சதவீதம் அதிகம். வரும் ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் ரயில் இன்ஜின்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

