3 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை 'குரூப் - 4' பணியிடங்கள் அதிகரிப்பு
3 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை 'குரூப் - 4' பணியிடங்கள் அதிகரிப்பு
ADDED : செப் 21, 2024 02:42 AM
சென்னை,:தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 'குரூப் - 4' தேர்வு பணியிடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கை:
கடந்த மூன்று ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வழியாக 34,384 பேர்; பல்வேறு அரசு துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் வழியாக 33,655 பேர் என, மொத்தம் 68,039 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 75,000 பேரை நியமனம் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
குரூப் - 4 தேர்வை பொறுத்தவரை 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்கள் தற்போது 6724 ஆக அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், அரசின் முயற்சியால், 5 லட்சத்து 8055 இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுஉள்ளனர்.
'நான் முதல்வன்' திட்டம் வழியாக, பொறியியல், தொழில்நுட்பம், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிக்கும் 27.74 லட்சம் இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு, அரசு மற்றும் தனியார்துறைகளில் வேலை வாய்ப்பை பெற்று தரும் பணியை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.