நாகர்கோவில், செங்கோட்டைக்கு சுதந்திர தின சிறப்பு ரயில்கள்
நாகர்கோவில், செங்கோட்டைக்கு சுதந்திர தின சிறப்பு ரயில்கள்
ADDED : ஆக 07, 2025 11:36 PM
மதுரை: சுதந்திர தினம், வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து நாகர்கோவில், செங்கோட்டைக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம் ஆக., 17 இரவு 11:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06012), மறுநாள் காலை 10:55 மணிக்கு தாம்பரம் செல்லும்.
மறுமார்க்கத்தில், ஆக., 18 மதியம் 3:30 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06011), மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
இதில் ரயில் (06012), வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். ரயில் (06011), செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இயக்கப்படும்.
இரு ரயில்களும், 2 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்குப் பெட்டி, ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.
செங்கோட்டை - எழும்பூர் ஆக., 14 இரவு 9:55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089), மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் ஆக., 17 இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090), மறுநாள் காலை 9:05 மணிக்கு எழும்பூர் செல்லும்.
இவ்விரு ரயில்களும் தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும். ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 4 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகின்றன.