'முரண்பாடுகளால் உருவானது 'இண்டியா' கூட்டணி' சொல்கிறார்: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்
'முரண்பாடுகளால் உருவானது 'இண்டியா' கூட்டணி' சொல்கிறார்: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்
ADDED : பிப் 04, 2024 02:38 AM
ராமநாதபுரம்: -''முரண்பாடுகளால் உருவானது இண்டியா கூட்டணி. அதில் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
சென்னையில் அண்ணாதுரை நினைவிடத்தில் பன்னீர்செல்வம், சசிகலா சந்தித்துள்ளனர். ஒத்த கருத்துள்ள இருவர் சந்திப்பதில் கருத்து கூற எதுவும் இல்லை. நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் நிறை, குறை உள்ளன. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எய்ம்ஸ் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
தேர்தல் கூட்டணி குறித்தும், நான் போட்டியிடுவதா, வேண்டாமா என முடிவு செய்யவில்லை. 'இண்டியா 'கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா காங்., கட்சியை எதிர்த்து பேசியுள்ளார். 'இண்டியா' கூட்டணி நீடிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. இதில் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார். கடந்த பழனிசாமி ஆட்சியில் ஊழல் காரணமாக மக்கள் தி.மு.க., விற்கு ஓட்டளித்தனர். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றாததால் மக்கள் தி.மு.க., மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்றார்.