ஜப்பானில் இந்திய ஜவுளி கண்காட்சி புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்பு
ஜப்பானில் இந்திய ஜவுளி கண்காட்சி புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்பு
ADDED : ஏப் 04, 2025 11:16 PM

திருப்பூர்:ஜப்பானில், 'இந்தியா டெக்ஸ் டிரெண்ட் பேர்' என்ற சர்வதேச ஜவுளி கண்காட்சி, ஜூலை 15ல் துவங்கவுள்ளது.
சர்வதேச சந்தைகளில் இருந்து, ஆண்டுக்கு 1.95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆடைகளை, ஜப்பான் இறக்குமதி செய்கிறது.
சீனா, வியட்நாம், வங்கதேசம், கம்போடியா, மியான்மர், இத்தாலி, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள், ஜப்பானுக்கான ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
டோக்கியோவில் உள்ள வர்த்தக கண்காட்சி மையத்தில், ஜப்பான் - இந்தியா தொழில் மேம்பாட்டுக்குழு சார்பில், ஜூலை 15 முதல் 17 வரை, 'இந்தியா டெக்ஸ் டிரெண்ட் பேர்' என்ற சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கிறது.
இதில், பங்கேற்க ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில், 'ஜப்பான், செயற்கை நுாலிழை ஆடைகளை அதிகம் இறக்குமதி செய்கிறது. மத்திய அரசு மானிய உதவியுடன், ஜப்பான் கண்காட்சியில் பங்கேற்று, புதிய ஆர்டர்களை ஈர்க்க, ஏற்றுமதியாளர்கள் முன்வரலாம்,' என்றனர்.