'இண்டியா' கூட்டணி தலைவர்கள் ‛ஈகோ'வை கைவிட வேண்டும்: திருமா
'இண்டியா' கூட்டணி தலைவர்கள் ‛ஈகோ'வை கைவிட வேண்டும்: திருமா
ADDED : பிப் 08, 2025 06:56 PM
மதுரை:''இண்டியா கூட்டணி தலைவர்கள் ‛ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் ''என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி இயக்கம், இவ்வளவு மோசமான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில், இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்., தன்னை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
காங்.,- ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தலைவர்கள் 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; சட்டசபை தேர்தலிலும் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் 100 சதவீதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக கவர்னர் ரவி இயங்கிக்கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும் செயல்திட்டத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

