எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான ஊழல் வழக்கு பட்டியல் தகவல் ஆணையம் கெடு
எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான ஊழல் வழக்கு பட்டியல் தகவல் ஆணையம் கெடு
ADDED : நவ 13, 2025 02:02 AM
சென்னை: தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த பட்டியல் கேட்ட மனுதாரருக்கு, ஒரு மாதத்திற்குள் வழங்க, மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை கேட்டு, த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ஆதித்யசோழன், கடந்தாண்டு நவம்பர் மாதம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மனு அனுப்பினார்.
மனு கிடப்பில் போடப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரருக்கு, 12 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.மாலா உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 10ம் தேதிக்குள், தகவல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நேற்று விசாரணை நடந்தது. மனுதாரர் ஆதித்யசோழன், பொது தகவல் அதிகாரி சரவணகுமார் ஆஜராகினர்.
சரவணகுமார் கூறுகையில், ''மனுதாரர் அட்டவணை வடிவத்தில் கேட்டதால், தகவல் தர முடியாது,'' என்றார். அதை கண்டித்த, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் எந்த வகையில் கேட்டாலும், கோப்பில் உள்ள தகவல்களை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்,'' என, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.

