பெண் மருத்துவர் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
பெண் மருத்துவர் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : நவ 13, 2025 02:01 AM
சென்னை: எவ்வித காரணமும் கூறாமல், கால்நடை துறையில், பெண் மருத்துவர் ஒருவருக்கு பணி மாறுதல் வழங்கி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்த மருத்துவர் ஈஸ்வரி, 2010ல் கால்நடைத் துறையில் இளநிலை உதவி மருத்துவராக பணியில் சேர்ந்தார். பின், கால்நடை உதவி மருத்துவராக பதவி உயர்வு பெற்றார்.
இவர் உட்பட, 20க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து, கடந்த அக்., 17ல், கால்நடை மருத்துவ துறையின் அப்போதைய இயக்குநர் கண்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு சில மருத்துவர்கள், 600 கி.மீ., தொலைவில் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்களின் தனிப்பட்ட உரிமைகளுக்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களை மிரட்டும் வகையில், இந்த பணியிட மாறுதல் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், பணியிட மாறுதலை எதிர்த்து, டாக்டர் ஈஸ்வரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் காட்சன் சுவாமிநாத், அபிஷா ஐசக் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் உட்பட வழக்கு தொடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கில், நிர்வாக காரணம் என்ற பெயரில் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பணியிட மாறுதல் உத்தரவில், குற்றச்சாட்டுகள் மற்றும் எந்தவிதமான நிர்வாக காரணமும் குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிரான பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரரான பெண் மருத்துவரை, தொடர்ந்து, ஏற்கனவே பணி செய்த இடத்தில் பணிபுரிய அனுமதிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழப்பீடு வழங்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

