இன்ஸ்., - டி.எஸ்.பி.,க்கள் பதவி உயர்வில் குளறுபடி?
இன்ஸ்., - டி.எஸ்.பி.,க்கள் பதவி உயர்வில் குளறுபடி?
ADDED : மார் 17, 2024 04:16 AM

சென்னை : காலி பணியிடங்களை கருத்தில் கொள்ளாமல், டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையில், 1996ல் நேரடி எஸ்.ஐ.,க்களாக பணியில் சேர்ந்த, 80க்கும் மேற்பட்டோருக்கு, இன்ஸ்பெக்டராக மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், 16 ஆண்டுகளுக்கு மேலாக, இன்ஸ்பெக்டர் என்ற நிலையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவும் உள்ளனர்.
இவர்களில், 57 பேருக்கு நேற்று,டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில், 37 டி.எஸ்.பி.,க்களுக்கு நேற்று கூடுதல் எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 37 டி.எஸ்.பி., பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:
பதவி உயர்வுக்கு தகுதி பெற்று இருந்தும், 16 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறோம். தற்போது, 37 டி.எஸ்.பி.,க்கள் பணியிடங்கள் காலியாகி உள்ளன.
எங்களுக்கு பதவி உயர்வு அளித்து, அந்த இடங்களில் எங்களை பணியமர்த்தி இருக்கலாம். டி.ஜி.பி., அலுவலக போலீஸ் உயர் அதிகாரிகளின் குளறுபடி காரணமாக பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு, முன் பதவி உயர்வு தர வேண்டும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் அவசர கதியில் செயல்பட்டதால் காலி பணியிடம் இருந்தும், அங்கு பணியமர்த்த எங்களுக்கு தகுதி இருந்தும் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், எங்களுக்கான பதவி உயர்வு எட்டாக்கனி தான்.
இனி பதவி உயர்வு அறிவிப்பு வரும் வரை எங்களில் பலர் ஓய்வு பெற்று இருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

