பெண் வழக்கறிஞரை அலைக்கழித்த இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
பெண் வழக்கறிஞரை அலைக்கழித்த இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
ADDED : ஜூன் 05, 2025 12:11 AM
சென்னை:புகார் கொடுத்த பெண் வழக்கறிஞரை அலைக்கழித்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரேகா என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
உடல், மன ரீதியாக என்னை துன்புறுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 2022 ஆகஸ்ட் 4ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.
அதைத் தொடர்ந்து, எழும்பூர் மகளிர் காவல் துறையினர் என்னிடம் விசாரித்தனர். அப்போது, பெண் போலீசார், என்னிடம் மனிதாபிமானமற்ற வகையில் நடந்து கொண்டனர். எனது புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்தனர்.
கடும் போராட்டத்துக்கு பின், நான்கரை மாதங்கள் கழித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எனவே, அலட்சியமாக செயல்பட்டு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: ஆணையம் நடத்திய விசாரணையில் சாட்சியம், ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, மிக தாமதமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது நிரூபணமாகிறது. தாமதத்திற்கான விளக்கத்தை, அப்போதைய எழும்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரான லட்சுமி தெரிவிக்கவில்லை. மனுதாரர் அலைக்கழிக்கப்பட்டது மனித உரிமை மீறல்.
எனவே, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் ரேகாவுக்கு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் இழப்பீடாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதை இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.