ADDED : பிப் 27, 2026 06:36 AM

சென்னை : தமிழகத்தில் பதுங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆறு பேர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கைப்பாவையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களை அடையாளம் காணும் பணியில், ஐ.பி., உள்ளிட்ட மத்திய உளவு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 1,076 கி.மீ., துாரத்திற்கு கடலோர பகுதிகள் உள்ளன. இவற்றில், 600க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அங்கு ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.
கடலோரங்களில், 52 காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் போலீசாரிடம், போதை பொருள் கடத்தல், சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

