மின் நுகர்வோரின் வைப்பு தொகைக்கு 5.76 சதவீதம் வட்டி
மின் நுகர்வோரின் வைப்பு தொகைக்கு 5.76 சதவீதம் வட்டி
ADDED : ஏப் 11, 2026 04:41 AM
சென்னை; தமிழகத்தில் மின் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வைப்பு தொகைக்கு, இந்த நிதியாண்டிற்கு, 5.76 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது, மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், வைப்பு தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது.
மின் பயன்பாட்டை பொறுத்து, வீடுகள் உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், வைப்பு தொகை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்த அளவை விட, அதிக மின்சாரம் பயன்படுத்தினால், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. இல்லையெனில், கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வைப்பு தொகைக்கு, வட்டி வழங்கப்படுகிறது. இதை ஒவ்வொரு ஆண்டும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. அதன்படி, நடப்பு, 2026 - 27ம் நிதியாண்டிற்கு வைப்பு தொகைக்கு, 5.76 சதவீதம் ஆண்டு வட்டி வழங்க, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது, முந்தைய ஆண்டில், 6.71 சதவீதமாக இருந்தது. தற்போது, வீடுகளுக்கு ஒருமுனை பிரிவில் வசூலிக்கப்படும் வைப்பு தொகை, 330 ரூபாயாகவும், மும்முனை பிரிவில், 995 ரூபாயாகவும் உள்ளது.
