ADDED : மார் 27, 2026 04:05 AM

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு ஏப்., 6ல் நடந்த கூட்டத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜூனில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராக, இரண்டு முறை பொன்முடிக்கு, 'சம்மன்' அனுப்பியது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''தனி நபர் புகாரை விசாரணைக்கு ஏற்கும் முன், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற, எங்கள் தரப்பு வாதத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, பொன்முடி மீதான வழக்கின் விசாரணைக்கும், அவர் நேரில் ஆஜராகவும் இடைக்கால தடை விதித்தார்.
மனுவுக்கு உமா ஆனந்தன் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
