பழனிசாமிக்கு எதிரான வழக்கு; விசாரணைக்கு இடைக்கால தடை
பழனிசாமிக்கு எதிரான வழக்கு; விசாரணைக்கு இடைக்கால தடை
ADDED : ஆக 20, 2025 06:32 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை நான்காவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி பி.பி.பாலாஜி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழனிசாமி தரப்பில், 'சூர்யமூர்த்தி அ.தி.மு.க., உறுப்பினரே இல்லை. கட்சி உறுப்பினர் அல்லாத சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில், சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார்.
இந்த மனுவுக்கு சூர்யமூர்த்தி பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, செப்., 3ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.