ரூ.6 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்ப்பு: மின் துறையில் ரூ.1.35 லட்சம் கோடி!
ரூ.6 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்ப்பு: மின் துறையில் ரூ.1.35 லட்சம் கோடி!
ADDED : ஜன 08, 2024 06:10 AM
சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு, தமிழக அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 வாயிலாக, 5.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
ஒப்பந்தம்
முதல்வர் ஸ்டாலின், மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் எலக்ட்ரானிக்ஸ், பசுமை மின் திட்டம் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்க, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.
இந்த மாநாட்டின் வாயிலாக, 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின் துறையில், 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன.
காற்றாலை மின் திட்டத்தில், 2,477 மெகா வாட்; சூரியசக்தி மின் திட்டத்தில், 15,601 மெகா வாட், 'ஹைபிரிட்' எனப்படும், ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டத்தில், 350 மெகா வாட் என, மொத்தம், 18,428 மெகாவாட் பசுமை மின் திட்டத்தில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன.
நீரேற்று மின் நிலையம்
இதன் வாயிலாக, 32 நிறுவனங்கள், 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய உள்ளன.
இதுதவிர, ஒரு நிறுவனம், 1,600 மெகா வாட் திறனில் நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு, 10,000 கோடி ரூபாய்.
நீரேற்று மின் நிலையம் என்பது, ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர் மீண்டும் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், இன்று மாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன.