இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தீர்வு; இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தீர்வு; இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை
UPDATED : ஜன 18, 2024 03:20 AM
ADDED : ஜன 18, 2024 02:22 AM

புதுடில்லி, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, 'இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்' என, வலியுறுத்தினார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள், செங்கடல் பகுதியில், இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இதில் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. இந்த சூழ்நிலையில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட முந்தைய ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஈரானின் சாபஹாரில் உள்ள துறைமுக மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்புகள் குறித்து ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:
செங்கடல் பகுதியில் உள்ள நிலவரம் பன்முகத்தன்மை கொண்டது. முதலில் கடற்கொள்ளையர்கள் பிரச்னை இருந்தது. தற்போது, ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. இது முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்னை.
அந்த வழியாக இயக்கப்படும் சரக்கு கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அதிபர் இப்ராஹிம் ரெய்சி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா - ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளோம்.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.
அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு, தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.