வைகை அணையில் திறக்கப்பட்ட முறைப்பாசன தண்ணீர் நிறுத்தம்
வைகை அணையில் திறக்கப்பட்ட முறைப்பாசன தண்ணீர் நிறுத்தம்
ADDED : மார் 18, 2024 01:36 AM
ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப்பாசன அடிப்படையில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன.,6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்து, நிரம்பியது. இதனைத்தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டு ஜனவரி 23ல் நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்தும், 5 நாட்கள் நிறுத்தியும் வருகின்றனர். மார்ச் 12ல் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 64.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 417 கன அடியாகவும் இருந்தது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி வீதம் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.

