வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு
ADDED : டிச 19, 2024 01:56 PM

திருச்சி: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை' என சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது தவறு அல்ல. விஜய் மக்களை பார்க்க போனால், கூட்டம் கூடி விடும். பாதுகாப்பு அளிப்பது போலீசாருக்கும் கடினம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று எப்படி த.வெ.க., தலைவர் விஜய் கூறலாம்? அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது. இரண்டு மாதம் மக்களோடு மக்களாக, நின்று வேலை செய்துள்ளோம்.
மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை. மக்களை நேரில் சென்று சந்திப்பது சடங்கு என கூறும் விஜய், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தது ஏன்?
துரோகம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தது ஏன்? ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பது மிகப்பெரிய துரோகம். தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பது தவறு. அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.

