ADDED : ஜன 27, 2026 05:21 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இருந்து பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக பழநி தைப்பூசத்தை காண நகரத்தார் காவடிகள் நேற்று கந்தனுக்கு அரோகரா... கடம்பனுக்கு அரோகரா... கோஷங்களுடன் சென்றது.
ஆண்டுதோறும் பழநி தைப்பூச திருவிழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி பாதயாத்திரையாக செல்வது உண்டு. இந்த நடைமுறையை 400 ஆண்டு களுக்கும் மேலாக கடைபிடித்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாகவே குன்றக்குடிக்கு திரும்புவர்.
இந்தாண்டு தைப்பூச திருவிழா திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிப்., 1 நடக்கிறது. இதற்காக காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக குன்றக்குடி சண்முகநாதர் பெருமான் கோயிலுக்கு வந்தனர்.
குன்றக்குடியில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து நேற்று காலை இடும்பன் வேல் முன் செல்ல 300க்கும் மேற்பட்ட காவடிகள் ஏந்தி நகரத்தார்கள் பழநிக்கு பாதயாத்திரையை துவக்கினர். பிப்.3 நகரத்தார் காவடிகள் பழநிக்கு சென்று சேரும். அன்றே பழனியாண்டவருக்கு காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும். பிப்.,7 காலை காவடி விடைபெற்று ஊர் திரும்பும்.
இதுபோன்று பாரம்பரியமாக நாட்டார்களும் நேற்று 200 காவடிகளை ஏந்தியவாரே குன்றக்குடியில் இருந்து பழநி புறப்பட்டனர்.

