தங்கம் விலை உயர்வுக்கு மோடி காரணமா? திருமா பேச்சுக்கு பா.ஜ., பதிலடி
தங்கம் விலை உயர்வுக்கு மோடி காரணமா? திருமா பேச்சுக்கு பா.ஜ., பதிலடி
ADDED : ஜன 29, 2026 03:07 AM

சென்னை: 'முதலில் தன் தொகுதி வளர்ச்சியை, வி.சி., தலைவர் திருமாவளவன் பட்டியலிட வேண்டும்; பின், பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியை விமர்சியுங்கள்' என, தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு தலைவரும், ஆடிட்டருமான எஸ்.சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியுள்ளதாவது:
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடியை பார்த்து கேட்கிறேன். 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்து, சாதித்து கிழித்திருக்கிறீர்கள்?
விலைவாசி உயர்ந்துள்ளது. இன்று, 1 சவரன் தங்கம் விலை 1.25 லட்சம் ரூபாய். எதனால் ஏற்பட்டது? உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு? தி.மு.க., அரசு பொறுப்பா? அதானிக்கும், அம்பானிக்கும் இந்தியாவை விற்று கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, சுந்தர்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருமாவளவன், 11 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருக்கிறார். தன் சிதம்பரம் தொகுதியில் எத்தனை புதிய தொழிற்சாலைகள் கொண்டு வந்திருக்கிறார்.
எத்தனை மத்திய திட்டங்களை முழுதுமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்; எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளார்; எத்தனை மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தார்?
ஆனால் பேசுவது, பிரதமர் மோடியின் 11 ஆண்டுகள் பற்றி. தங்கம் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும் பிரதமர் மோடியின் தவறா?
ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் நிலையற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றங்கள் ஆகியவையே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்.
இதெல்லாம் தெரிந்தால், திருமாவளவன் உண்மையை பேசியிருப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

