ஆசிரியர் வாயிலாக தமிழ் பயிலும் கவர்னர் தமிழுக்கு எதிரியா: அர்ஜுன் சம்பத் கேள்வி
ஆசிரியர் வாயிலாக தமிழ் பயிலும் கவர்னர் தமிழுக்கு எதிரியா: அர்ஜுன் சம்பத் கேள்வி
ADDED : ஜன 07, 2025 07:37 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள முத்தராம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி சண்டியாகம் நடைபெறுகிறது.
அதில், கலந்து கொள்ள வந்திருந்த ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:
தமிழகத்தில் திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு தேசியத்தை எதிர்த்து வருகின்றனர்; பிரிவினையையும் தூண்டுகின்றனர். மத்திய அரசை விமர்சனம் செய்யலாம். ஆனால், தேசிய கீதத்திற்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும்.
சட்டசபையில் தேசிய கீதம் பாட வேண்டும் என கவர்னர் வலியுறுத்தியுள்ளார். அது நடக்காத சூழலில் வெளி நடப்பு செய்திருக்கிறார்.
தமிழ் ஆசிரியரை வைத்து, கவர்னர் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். அதை வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி வருகிறார். ஆனால், அவர் தமிழுக்கு எதிரிபோல சித்தரிக்க முயல்கின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவில் திராவிடத்தை ஏற்பதில்லை. இங்கு தான் சினிமாக்காரர்களை வைத்து திராவிடத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே கோவில்கள் அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.
இதனாலேயே ஹிந்து கோவில்களில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளன. அதே நேரம் சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் அப்படிப்பட்ட நிலை இல்லை.
அதனால், கோவில்கள் அனைத்தையும் ஹிந்து அறநிலையத் துறை விடுவிக்க வேண்டும். நிர்வாகத்தை, ஹிந்து ஆன்மிகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிர்வாகத்தை கவனிக்க, தனி அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
கோவில் வருமானத்தை வைத்து, கல்லுாரிகள் கட்டுகின்றனர். கோவில் சொத்துக்களில் கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. வக்பு சொத்தை பாதுகாக்க, 40 பார்லிமென்ட் எம்.பி.,க்களும் குரல் எழுப்புகின்றனர். ஹிந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க யாரும் அப்படி செய்வதில்லை. எனவே, ஹிந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க, புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

