பாலியல் வன்முறை விசாரணை சரியான திசையில் செல்கிறதா? அண்ணாமலை சந்தேகம்
பாலியல் வன்முறை விசாரணை சரியான திசையில் செல்கிறதா? அண்ணாமலை சந்தேகம்
ADDED : ஜன 05, 2025 04:16 AM

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
அண்ணா பல்கலை மாணவி, தி.மு.க., நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் மொபைல் போனில் பேசியதாக, மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தன் மொபைல் போனை, 'ஏரோபிளேன்' மோடில் வைத்திருந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியில், காவல் துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது.
குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

