ரெய்டா, இல்லை கட்சி கூட்டமா: அமைச்சர் துரைமுருகன் வீடு முன் சேர் போட்டு அமர்ந்த தி.மு.க.,வினர்!
ரெய்டா, இல்லை கட்சி கூட்டமா: அமைச்சர் துரைமுருகன் வீடு முன் சேர் போட்டு அமர்ந்த தி.மு.க.,வினர்!
UPDATED : ஜன 03, 2025 05:49 PM
ADDED : ஜன 03, 2025 05:19 PM

வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீட்டின் முன்பு சேர்களை கொண்டு வந்து போட்டு தி.மு.க.,வினர் அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக, இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மூன்று கார்களில், ஆறு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடத்தினர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அமைச்சரின் வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து தகவல் அறிந்த தி.மு.க., தொண்டர்கள், டெம்போவில் வாடகைக்கு சேர்களை எடுத்து வந்து, விஷேச வீடுகளில் அமர்வது போல, வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.