ADDED : நவ 29, 2024 05:10 AM

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக லஞ்சமாக பெறப்பட்ட, 11 லட்சத்து 70,000 ரூபாய் பணத்துடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால், ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவரை நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனைக்கு பதிலாக, வெகுமதி வழங்குவது கண்டனத்துக்குரியது. 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக, கடைநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 11.70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு அதிகாரம் மிக்க பதவியை வழங்குவதன் மூலம், தமிழக அரசு சொல்ல வரும் செய்தி என்ன?
இப்படித்தான் ஊழலை ஒழித்து, தமிழக அரசு நிர்வாகத்தை துாய்மைப்படுத்தப் போகிறதா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

