ஐ.எஸ்., அமைப்பில் ஆண்டுக்கு 1,000 பேர் சேர்க்க இலக்கு: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்
ஐ.எஸ்., அமைப்பில் ஆண்டுக்கு 1,000 பேர் சேர்க்க இலக்கு: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்
UPDATED : ஜன 01, 2025 07:03 AM
ADDED : ஜன 01, 2025 07:01 AM

சென்னை: 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ஆண்டுக்கு 1,000 பேரை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்தோம்' என, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அபு ஹனீபா, 33; பவாஸ் ரஹ்மான், 36; சரண், 25, ஆகியோரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அபு ஹனீபா அளித்துள்ள வாக்குமூலம்:
இலங்கையில், 2019ல் ஈஸ்டர் நாளில், சர்ச் உள்ளிட்ட இடங்களில், தொடர் குண்டு வெடிப்பு நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்தோம். எங்களுக்கு, சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவையில் ரகசிய பயிற்சி அளித்தார். அவருக்கு அடுத்த நிலையில், ஜமேஷா முபின் செயல்பட்டு வந்தார்.
அவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் எங்களுக்கு, துப்பாக்கி சுடுதல் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்தார். எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் சங்கேத மொழியில் நடந்து வந்தது.
கேரள மாநிலம் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், அரபு கல்லுாரிகளை, ஆயுத பயிற்சி அளிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தோம். ஆண்டுக்கு 1,000 பேரையாவது ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்க வேண்டும் என, சஹ்ரான் ஹாசிம் இலக்கு நிர்ணயித்து இருந்தார். அதற்கான பணிகளை முழுவீச்சில் கவனித்து வந்தோம்.
எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள், வேறு சில பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். இதனால், அவர்கள் எங்களின் எதிரி பட்டியலில் இடம்பெற்றனர். கோவை ஈஸ்வரன் கோவிலை தகர்த்து, எங்கள் முதல் வெற்றியாக கொண்டாட இருந்தோம்; அது தோல்வியில் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

