6,500 கிலோ செயற்கை கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
6,500 கிலோ செயற்கை கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
ADDED : ஆக 11, 2025 06:37 AM

சென்னை: ''அமெரிக்கா வடிவமைத்துள்ள, 6,500 கிலோ எடையுள்ள செயற்கை கோளை, அடுத்த சில மாதங்களில், இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது,'' என, அதன் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்.பல்கலையின், 21வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக மஹாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு, எஸ்.ஆர்.எம்.பல்கலை சார்பில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அத்துடன், 8,994 இளநிலை மாணவர்கள், 564 முதுநிலை மாணவர்கள், 141 பி.எச்.டி மாணவர்கள் என, மொத்தம் 9,769 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:
நம்நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த, 1963ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது.
அப்போது, அமெரிக்கா வழங்கிய ஒரு சிறிய ராக்கெட்டை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.
கடந்த மாதம் 30ம் தேதி, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. 'நிசார்' செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்ணில் ஏவுதல் நிகழ்வை, நாசா விஞ்ஞானிகள் வெகுவாக பாராட்டினர்.
அமெரிக்காவிடம் இருந்து, ஒரு சிறிய ராக்கெட் பெற்ற இந்தியா, சில மாதங்களில் அமெரிக்கா வடிவமைத்த, 6,500 கிலோ எடையுள்ள, தகவல் தொடர்பு செயற்கை கோளை, ஏவ தயாராக இருக்கிறது.
இதுதான் நாட்டின் வளர்ச்சி. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்தியாவின் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை, நம் செயற்கை கோள்கள் வழியே உறுதி செய்தோம்.
தற்போது, இஸ்ரோவின், 56 செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கப்படும்.
வரும், 2035ம் ஆண்டுக்குள், இஸ்ரோ அதன் சொந்த விண்வெளி நிலையத்தை விண்வெளியில் உருவாக்கும். அடுத்து, 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாம் இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பாரிவேந்தர், இணைவேந்தர் சத்யநாராயணன், துணைவேந்தர் முத்தமிழ் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.