'மது ஆலை நடத்துவோர் குறித்து கணக்கெடுக்க முடியாது'
'மது ஆலை நடத்துவோர் குறித்து கணக்கெடுக்க முடியாது'
ADDED : அக் 28, 2025 07:23 AM

ஈரோடு: ''மது ஆலைகளை யார் நடத்துகின்றனர் என்பதை கணக்கெடுக்க முடியாது,'' என, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் அவர அளித்த பேட்டி:
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியில், வெறும் 85 மட்டுமே நிறைவேற்றி உள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறுகிறார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம்.
அடுத்த பேட்டியின்போது, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், ஆய்வில் உள்ள திட்டங்கள் பற்றிய பட்டியலை தருகிறேன். அதை வைத்து, அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது உண்மை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் தான் முழுமையாக பைப் லைன் அமைத்து, மொத்தம் உள்ள 1,045 குளங்களில், 1,000க்கும் மேற்பட்டவற்றில் தண்ணீர் நிரப்பி உள்ளோம்.
தமிழகத்தில் மதுபான ஆலைகளை, தி.மு.க.,வினர் நடத்துவதாகவும், மதுக்கடைகளை மூடுவதாக, கனிமொழி எம்.பி., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் கேட்கின்றனர். உண்மையில், தி.மு.க., ஆட்சியில், 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
அந்த காலத்தில் மதுபான ஆலைகளை, சிலர் நடத்த ஆரம்பித்திருக்கலாம். தற்போது, யாரிடம் எல்லாம் உள்ளன என கணக்கு எடுக்க முடியாது. அது ஒரு தொழில்; சட்டத்தை மீறினால் கேட்கலாம். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதை எதுவும் செய்ய முடியாது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்த நாள் போஸ்டரில், கருணாநிதி, ஈ.வெ.ரா., போன்றவர்களின் படங்கள் இல்லாதது குறித்து, என்.கே.கே.பி.ராஜா போன்ற மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளதால், விசாரித்து நடவடிக்கை எடுப்போம். எனினும், யாரோ அடித்த போஸ்டருக்கு செந்தில் பாலாஜி பொறுப்பாக முடியாது.
இவ்வாறு கூறினார்.

