காலி பணியிடங்களை நிரப்ப அரசு அக்கறை காட்டாதது சரியல்ல ஐகோர்ட் கடும் கண்டனம்
காலி பணியிடங்களை நிரப்ப அரசு அக்கறை காட்டாதது சரியல்ல ஐகோர்ட் கடும் கண்டனம்
ADDED : பிப் 08, 2025 10:25 PM
சென்னை:'கூடுதல் உறுப்பினரை நியமிக்கக்கோரி, மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கடிதம் அனுப்பி, 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது என்பது, அரசின் அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
'தீர்ப்பு வழங்குவதும் அவரே; தட்டச்சு செய்வதும் அவரே. நுகர்வோர் நீதிமன்றங்களின் அவலநிலை' என்ற தலைப்பில், கடந்தாண்டு ஆகஸ்ட் 21ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது.
நுகர்வோர் நீதிமன்றங்களில், போதிய எண்ணிக்கையில் சுருக்கெழுத்தர்கள், உதவியாளர்கள் இல்லை என்பது, செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
அறிக்கை தாக்கல்
இந்தச் செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சரத் சந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விபரம்:
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த டிசம்பர், 31 வரை 2,591 வழக்குகள், மதுரை கிளையில் 1,463 வழக்குகள் என, மொத்தம் 4,054 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை, மதுரை கிளையில், தலைவர் மட்டுமே உள்ளனர். நான்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.
மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், உத்தரவுகளை அமல்படுத்தும், 'பெயிலிப்' பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாக, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் 2,589, மாநில அமர்வில் மட்டும் 114 என, உத்தரவுகளை நிறைவேற்ற கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். மேம்படுத்தப்பட்ட கணினிகள் இல்லாததால், அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது.
சுருக்கெழுத்தர் காலியிடங்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலரின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 'மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், பதிவாளர் உட்பட, 230 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டவை. அவற்றில், 24 பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன், காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பணிகளின் தற்போதைய நிலவரங்களும் இடம் பெற்றிருந்தன.
அரசுக்கு கடிதம்
மேலும், நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்கள் குறித்து, அரசின் கருத்தை பெற்று மனுதாக்கல் செய்வதாக அரசு பிளீடர் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மாநில நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கக்கோரி, அதன் தலைவர், 2023ம் ஆண்டு மார்ச்சில், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதி, 22 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நிதி நெருக்கடி காரணமாக, கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கக் கோரிய கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என, அரசு செயலர் பதில் அனுப்பியுள்ளார்.
இது, அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. எனவே, இதுதொடர்பாக, வரும் 14ம் தேதிக்குள், நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.