தனியாரிடம் அரசு மன்றாடுவது வெட்கக்கேடானது: பன்னீர்செல்வம்
தனியாரிடம் அரசு மன்றாடுவது வெட்கக்கேடானது: பன்னீர்செல்வம்
UPDATED : ஜன 02, 2025 08:19 PM
ADDED : ஜன 02, 2025 08:08 PM
சென்னை:'அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த மூன்றரை கால தி.மு.க., ஆட்சியில், உள்கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமை, பள்ளிகள் இடிந்து விழும் நிலைமை ஆகியவற்றின் காரணமாக, கல்வித்தரம் வெகுவாக குறைந்துள்ளது.
அடுத்த கல்வியாண்டில், 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, அருகில் உள்ள தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசி இருப்பது, தமிழகம் கல்வியில் பின்தங்கி உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும், 44,042 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்ற திட்டம் அடங்கும். இந்த பணத்தை தி.மு.க., அரசு என்ன செய்தது என்பதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு வரிகள், கட்டணங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசு வருமானத்தை உயர்த்தி உள்ளது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., வரி வழியே 10,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவு வழியாக, 2,500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என, அரசு கூறுகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தனியாரிடம் மன்றாடுவது வெட்கக்கேடானது. இது அரசுப் பள்ளிகளை படிப்படியாக, தனியாரிடம் ஒப்படைத்து விடும் நடவடிக்கை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் மூலம், 500 அரசு பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள்
ஏற்படுத்தி தரப்படும். அரசு பள்ளிகளின் அடிப்படை தன்மை மாறாது. இதை தான்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். இது, தவறாக புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புகள் உருவாக்கும்
முயற்சி தான் இது. கட்டணங்கள் மாறாது.
தமிழக வரலாற்றில் இதுவரை
இருந்த கல்வி அமைச்சர்களில், மகேஷ் தான் சிறந்த கல்வி அமைச்சர். கல்வித்
துறைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய கல்வி அமைச்சரை
சந்தித்தபோது, ஹிந்தியை ஏற்க கட்டாயப்படுத்தினார். அப்போது தான் நிதி
ஒதுக்கப்படும் எனவும் கூறினார். இருமொழி கொள்கை தான் எங்களின் கொள்கை;
மூன்றாவது மொழியை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது எனக் கூறி விட்டோம்.
மூன்றாவது மொழி படிப்பதை மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தான் முடிவு செய்ய வேண்டும்; அரசியல் இயக்கங்கள் அல்ல.
துரை வைகோ, எம்.பி., - ம.தி.மு.க.,

