ADDED : ஆக 25, 2025 01:10 AM
சென்னை: 'தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், அதிகபட்சமாக, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில், ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அப்பால், அடுத்த, 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும், 30ம் தேதி வரை, இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசை ஒட்டியே பதிவாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.