ADDED : ஜூன் 03, 2025 10:23 PM
சென்னை:தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி போன்ற இடங்களில், தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும், 9ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம்.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 இடங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, மதுரை விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், துாத்துக்குடியில் தலா, 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.