ஜெர்மனியில் வேலை கிடைத்தும் 250 நர்ஸ் போக முடியாத பரிதாபம்
ஜெர்மனியில் வேலை கிடைத்தும் 250 நர்ஸ் போக முடியாத பரிதாபம்
ADDED : ஜன 31, 2025 10:39 PM
தேனி:தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தில், ஜெர்மனியில் நர்சிங் வேலைக்கு தேர்வானவர்களுக்கு மொழி பயிற்சி வகுப்புகள் துவங்காததால், தேர்வானவர்கள் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலை ஏற்படுத்தி தரப்படும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பி.எஸ்சி., நர்சிங் படித்து, ஓராண்டு அனுபவமுள்ள, 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்கு, ஜெர்மன் மொழி பயிற்சி சென்னையில் வழங்கப்படும். அதன்பின், அரசு மூலம் நர்சிங் பணிக்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நர்சிங் முடித்த பலரும், ஜெர்மனியில் பணிபுரியும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதில், 250 பேர் வரை தேர்வாகினர். இவர்களுக்கு, தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் 2024 நவம்பரில் அனுப்பப்பட்டது.
ஆனாலும், ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்புகள் இதுவரை துவங்கப்படவில்லை. தேர்வானவர்கள் எப்போது மொழி பயிற்சி முடித்து ஜெர்மனிக்கு வேலைக்கு செல்வது என, கேள்வி எழுப்புகின்றனர்.
பயிற்சி வகுப்பை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க வேண்டும் என்பதால், துவக்க விழா தள்ளிப்போகிறது. பயிற்சி எப்போது துவங்கும் என அறிய, திட்ட சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும், அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை.
இதனால், வெளிநாடு வேலைக்கு தேர்வானவர்கள் தவிப்பில் உள்ளனர்.