ADDED : பிப் 19, 2025 04:35 AM

சென்னை; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான, வரும் 24ம் தேதி சட்டசபை தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவங்குகிறார். அ.தி.மு.க.,வின் 82 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும் 24ம் தேதி மாலை நடக்கவுள்ளது.
'பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்காக கட்சியை தயார்படுத்தும் பணியில், அ.தி.மு.க., இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த, அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 24ம் தேதி, மறைந்த ஜெயலலிதா பிறந்த நாள். அன்றைய தினம், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன், சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

