ADDED : ஜன 15, 2024 05:13 AM

அவனியாபுரம் : அவனியாபுரத்தில் இன்று (ஜன.,15) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதற்காக அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் சில நாட்களாக ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதில் பங்கேற்க 2400 காளைகள், 1318 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை, ஆதார் ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், ஆயிரம் காளைகள், 600 வீரர்களுக்கு அனுமதி அளித்தது.
இன்று காலை 5:30 மணிக்கு மீண்டும் கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்குப் பின்பு களத்தில் விளையாட அனுமதிப்பர். திருப்பரங்குன்றம்- ரோட்டில் உள்ள குருநாதசுவாமி சமேத அங்காள ஈஸ்வரி கோயில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அருகே வி.ஐ.பி.,க்கள் மேடை, காளைகள், வீரர்கள் காயமடையாத வகையில் ரோட்டில் 200 மீட்டருக்கு தேங்காய் நார்கள் விரிக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் இரும்பு வலைகளுடன், மூங்கில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் வாகனங்கள் முத்துப்பட்டி பிரிவுவரை அனுமதிக்கப்படுகின்றன. அவனியாபுரம் ஊருக்குள் வாகனங்களுக்கு தடைவிதித்து, பைபாஸ் ரோட்டில் இயக்கப்படுகின்றன.
நேற்று காலை பலர் காளைகளுடன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாடுபிடி வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மோலாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.