அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற ஜெயலலிதா தான் காரணம்: பன்னீர்செல்வம்
அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற ஜெயலலிதா தான் காரணம்: பன்னீர்செல்வம்
ADDED : பிப் 12, 2025 07:30 PM
சென்னை:'அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, முழு முதற் காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லுார் அருகில், பவானி ஆற்றில் இருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, பொதுப்பணித்துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் மற்ற நீர் நிலைகளில் நிரப்பும் திட்டமாகும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டவர் ஜெயலலிதா.
'மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும், அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்' என, அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார். கடந்த 2016 பிப்.,16ல் சமர்ப்பிக்கப்பட்ட, 2016 - 17 ம் ஆண்டுக்கான, இடைக்கால பட்ஜெட்டில், அத்திக்கடவு - அவினாசி திட்டம் இடம் பெற்றிருந்தது. இவற்றை நிதி அமைச்சர் என்ற முறையில், சட்டசபையில் வாசித்தேன்.
அதைத் தொடர்ந்து, 2016 பிப்.,18ல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பொதுப்பணித்துறை சார்பில், 3.27 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் சட்டசபை பொதுத்தேர்தலின்போது, இத்திட்டம் நிறைவேற்றப்படும் என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் பாதையில் நடந்த ஆட்சி, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது.
இன்று அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால், அதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.