ஆட்சியின் சாதனைகளை பார்த்து எதிரிகளுக்கு பொறாமை, கோபம் கவர்னரும் அதற்கு விலக்கல்ல: ஸ்டாலின்
ஆட்சியின் சாதனைகளை பார்த்து எதிரிகளுக்கு பொறாமை, கோபம் கவர்னரும் அதற்கு விலக்கல்ல: ஸ்டாலின்
ADDED : பிப் 16, 2024 12:40 AM
சென்னை:தமிழகத்தின் சாதனைகளை, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
அதன் விபரம்:
என் கையில் முதல்வர் என்ற பொறுப்பு வந்து, 33 மாதங்களாகிறது. இவை முன்னேற்ற மாதங்கள்; சாதனை மாதங்கள்.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு, 9 சதவீத பங்கை தமிழகத்தில் பொருளாதார வளம் தருகிறது. இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பது இரண்டாவது சாதனை
ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 சதவீதமாக இருக்கும் போது, தமிழகத்தின் வளர்ச்சி 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது மூன்றாவது சாதனை
இந்திய அளவில் பணவீக்கம், 6.65 சதவீதமாக இருக்கும் போது, தமிழகத்தில் 5.97 சதவீதமாக குறைந்துள்ளது; இது, நான்காவது சாதனை
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; இது ஐந்தாவது சாதனை
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது; இது ஆறாவது சாதனை
தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக, 14ம் இடத்தில் இருந்த தமிழகத்தை, மூன்றாம் இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்; இது ஏழாவது சாதனை
கல்வியில் இரண்டாவது இடத்துக்கு தமிழகத்தை உயர்த்தியது, இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை
புத்தாக்க தொழில்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை
இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்து, தங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதாக சொல்லத் துவங்கி இருப்பது தான், திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை
இந்தியாவின் தென்மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அதன் திட்டங்களை தெரிந்து வந்து, நம் மாநிலத்தில் செயல்படுத்துவோம் என, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வது, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்று சாதனை
இந்த சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவது போல், ஒரு சாதனை இருக்கிறது. அதுதான் மிக முக்கியமானது.
நம் ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து, நம் இன எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருகிறது. அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை.
ஆதிக்கக் குவியலை அகற்றுவதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும், இவர்கள் கோபத்துக்கு காரணம். அந்த கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகின்றனர். அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் கவர்னரும் அதற்கு விதிவிலக்கல்ல.
இவ்வாறு முதல்வர் பேசினார்.