ADDED : டிச 24, 2025 09:30 PM

சென்னை; ''பைபிளின் கருத்தும், தி.மு.க.,வின் கொள்கையும் ஒன்று என முதல்வர் ஸ்டாலின் பேசுவதை, 'இயேசுவே' ஒப்புக்கொள்ள மாட்டார்,'' என, தமிழக பா.ஜ. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 13 அமைச்சர்கள், சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் பெயிலில் இருக்கின்றனர். ஆன்மிகத்தை எதிர்த்து பேசியவர்கள், பெயிலில் இருக்கின்றனர். ஆன்மிகத்தை நம்பிக் கொண்டிருக்கிறவர்கள், காசிக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கின்றனர்.
'ஹிந்து' என்று சொன்னால் மதவாதிகள். மற்ற மதம் என சொன்னால், அவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்ற பிம்பம் உள்ளது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஞானிகள், 'பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள்' என சொன்னால், அது மதவாதம் என சொல்கின்றனர்.
அதே சிறுபான்மையினர், தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்று சொன்னால், அது மதச்சார்பின்மை என கூறுகின்றனர். போலி மதச்சார்பின்மை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை உடைத்து எறிய வேண்டும். பைபிளின் கருத்தும், தி.மு.க.,வின் கொள்கையும் ஒன்று என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
இதை, எந்த கிறிஸ்துவரும் ஏற்க மாட்டார்கள். ஏன், 'இயேசுவே' ஏற்க மாட்டார்? கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்கு, தி.மு.க.,வினர் பக்திக்காக வரவில்லை; ஓட்டுக்காக வருகின்றனர். இதை, சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

