தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
UPDATED : மார் 21, 2025 02:16 PM
ADDED : மார் 21, 2025 09:48 AM

சென்னை: சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, நாளை நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம். தொகுதி மறு சீரமைப்பு தான் இப்போது பேசு பொருளாக இருக்கிறது. தி.மு.க., இதனை ஏன் பேசும் பொருளாக ஆக்கிவிட்டது என்றால் 2026ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு கட்டாயம் நடந்தே ஆக வேண்டும்.
அப்பொழுது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நமது எம்.பி.,க்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து தான் முதலில் நாம் குரல் எழுப்பி இருக்கிறோம். இது எம்.பி.,க்கள் எண்ணிக்கை மட்டும் சார்ந்த பிரச்னை அல்ல; நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை. அதனால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம்.
பா.ஜ.,வை தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறு சீரமைப்பு வேண்டுமென்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதில் இந்த தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுக்கும் பார்லிமெண்டில் பிரதிநிதித்துவம் இருக்கக்கூடிய அந்த மாநிலத்தை சார்ந்த எல்லா கட்சியோட தலைமைக்கும் நான் கடிதம் எழுதினேன்.
அந்த கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி., அடங்கிய குழு அவர்களை நேரில் சந்தித்து கொடுத்து விளக்கம் அளித்தார்கள். எல்லா மாநில முதல்வர்களுடனும் நானே போனில் பேசினேன். ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சி காரணமாக தங்களது பிரதிநிதித்துவத்தை அனுப்புகிறேன் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். சிலர் நேரில் வருவதாக கூறியுள்ளனர். முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
இப்பொழுது எதற்கு இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பால் நமது தமிழகமும், நாம் அழைத்திருக்கும் மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பு இருக்காது. பார்லிமெண்டில் நமது குரல் நசுக்கப்படும். நமது உரிமைகளை நிலை நாட்ட முடியாது.
இது, இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. அதனால் தான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுடன் ஒருங்கிணைந்த சிந்தனை படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கிற இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி அடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவை காக்கும், நன்றி வணக்கம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
![]() |
கேரளா முதல்வர் வருகை
தொகுதி மறுவரையறை தொடர்பாக, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, கேரளா முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்தார். அவரை அமைச்சர் தியாகராஜன், தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் விமானநிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.