85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு
85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு
ADDED : டிச 20, 2025 06:39 AM

சென்னை: ''உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஒன்பது ஆண்டுகளில், 85,000 வழக்குகளுக்கு தீர்வு கண்டு உள்ளார்,'' என, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பாராட்டினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2016 அக்டோபரில் நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.ரமேஷ்; வரும், 27ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், நேற்று பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இந்த ஆண்டில், 11 நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இது, நீதித்துறை நிர்வாகத்தை நிச்சயமாக பாதிக்கும். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2016 அக்டோபர் முதல் இதுவரை, 85 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா வழக்கு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை,'' என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''நீதிமன்றத்தில், நாங்கள் தற்காலிக காவலர்கள். நீதி வழங்குவது மட்டுமல்லாமல், நீதிபதிகளுக்கு பொறுமை முக்கியம் என்பதை, பதவி காலத்தில் உணர்ந்தேன்,'' என்றார்.

