ராஜேந்திர பாலாஜி வழக்கில் உத்தரவை மாற்ற நீதிபதி மறுப்பு
ராஜேந்திர பாலாஜி வழக்கில் உத்தரவை மாற்ற நீதிபதி மறுப்பு
ADDED : ஜன 08, 2025 01:31 AM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் வாயிலாக, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சாத்துாரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, பல்வேறு தவணைகளில் 30 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
வேலை பெற்று தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் புகார் அளித்தார். அதன்படி, ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2021 முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, ரவீந்திரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோடு, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தர விட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர, அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று காவல் துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்று கொள்ளும்படி தெரிவித்தார்.