முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., வழக்கில் பிப்., 3ல் தீர்ப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., வழக்கில் பிப்., 3ல் தீர்ப்பு
ADDED : ஜன 30, 2024 12:50 AM

விழுப்புரம்: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாசுக்கு, 3 ஆண்டு சிறை, பெண் அதிகாரி காரை மறித்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை நடக்கிறது. வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற, ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.
அவரது வழக்கறிஞர் ரவீந்திரன், 'கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு வழக்கை மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளோம். அது விசாரணையில் உள்ளதால், எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டும்' என, கோரினார்.
அரசு வக்கீல் கலா, 'சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிப்., 23க்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதால், அவகாசம் அளிக்கக் கூடாது' என்றார்.
நீதிபதி பூர்ணிமா, 'அவகாசம் தர முடியாது. வரும் 31ம் தேதிக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தால் குறிப்பிடலாம். இல்லையெனில் கடைசி வாய்ப்பாக அன்று நேரில் ஆஜராகி வாதங்களை வைக்க வேண்டும்.
'பிப்., 3ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்' என, உத்தரவிட்டார்.