ADDED : அக் 02, 2025 06:04 PM
ஊரில் ஒரு பிரச்னை என்றால், அதை செய்தியாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டு, கடமை முடிந்தது என்ற திருப்தியுடன் கைகழுவி செல்வதல்ல, தினமலர் மரபு.
பிரச்னைக்கு தீர்வு என்ன என்பதையும் நிபுணர்கள் வாயிலாக, ஆய்வுகள் மூலமாக அறிந்துணர்ந்து மக்களுக்கு சொல்வது; தீர்வுக்கு செயல்வடிவம் கொடுக்க என்ன செய்வது என்பதை திட்டமிடுவது; திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி உழைப்பது என்று அடுத்தடுத்த கட்டங்களில் பணியாற்றுவது தினமலர் மரபணு ரகசியம்.
கோவையின் நீர் நிலைகளை மீட்டெடுத்து பராமரிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம்தானா என்று பலரும் தலையை சொறிந்து கொண்டிருந்த வேளையில், கால் சட்டையை சுருட்டி விட்டுக் கொண்டு கையில் மண் அள்ளும் கருவிகளுடன் குளங்களில் இறங்கியது தினமலர் ஊழியர் பட்டாளம். முண்டாசு கட்டாத குறையாக ஊழியர்களுடன் சேர்ந்து உரிமையாளர் பிரதிநிதியாக வெளியீட்டாளரும் களம் கண்ட நிகழ்வுகள் ஏராளம்.
மக்களின் மனங்களில் செய்திகளால் தூர் வாரிய கரங்கள் இன்று மண்ணில் தூர் வாரி தண்ணீர் காக்க களம் காண்கிறது என்று வாசகர்கள் நெஞ்சு நிறைய வாழ்த்தியது பேரதிர்ஷ்டம், பெரும் பாக்கியம்.