கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்துார் சபா செயல்தலைவர் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்துார் சபா செயல்தலைவர் வலியுறுத்தல்
ADDED : அக் 12, 2024 12:16 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ''தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துடன் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதனால் வட மாநில ரயில்களும் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை தட நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளது'' என தெற்கு ரயில்வே ஹிந்து மஸ்தூர் சபா செயல் தலைவர் சுப்ரமணியன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில்கள் பற்றாக்குறை, ரயில்வே கட்டமைப்புகள் குறைபாடு இருக்கிறது. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ரயில்வே கட்டமைப்பும் இன்னும் செம்மைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்கள் விரிவடைந்து வரும் நிலையில் சென்னையில் உள்ளதுபோல் இங்கும் மின்சார ரயில்களை இயக்க வேண்டும். இதனால் கிராமப்புற மக்களும் பயனடைவர். மெட்ரோ ரயிலில் ஏழை மக்கள் பயணிக்க வாய்ப்பிருக்காது.
வந்தே பாரத்தில் அதிக கட்டணம் உள்ள நிலையில் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயணிக்க சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும். முன்பதிவு இல்லா பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்துாருக்கு இயங்கும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் மூலம் பல்வேறு மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதே போல் சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கினால் ஏழை மக்கள் பயனடைவர்.
மதுரை ரயில்வே கோட்டத்தை இன்னும் வலுப்படுத்தினால் துாத்துக்குடி போன்ற துறைமுக நகரம் மேலும் வளர்ச்சி பெறும். மாநிலத்தில் வர்த்தகம் அதிகரிக்கும்.
இதற்கு தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துடன் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதனால் வட மாநில ரயில்களும் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை தட நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளது என்றார்

