ரயில்வே விழாவில் கார்த்தி எம்.பி.,- பா.ஜ., வினர் வாக்குவாதம்
ரயில்வே விழாவில் கார்த்தி எம்.பி.,- பா.ஜ., வினர் வாக்குவாதம்
ADDED : பிப் 27, 2024 12:01 AM

காரைக்குடி : காரைக்குடியில் நடந்த ரயில்வே விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசிய கார்த்தி எம்.பி.,யை கண்டித்து பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி நேற்று(பிப்.,26) காணொளியில் 554 ரயில்வே ஸ்டேஷன்களுக்கான ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். காரைக்குடியில் அதற்கான விழா நடந்தது. அரசு விழாவில் ரயில்வே அதிகாரிகள், சிவகங்கை கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
அங்கு பேசிய கார்த்தி எம்.பி., 'தமிழகத்தில் இருந்து வரியாக மத்திய அரசுக்கு ரூ.1 செலுத்தினால், 29 பைசாவை தான் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி தருகிறது. ஆனால் உத்தரபிரதேச மாநிலம் ரூ.1 செலுத்தினால், 2 ரூபாய் 75 பைசாவை மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்குகிறது 'என பேசினார்.
இதில் ஆத்திரமுற்ற பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையிலான கட்சியினர், 'அரசு விழாவில் எம்.பி., எப்படி அரசியல் பேசலாம்'எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும், 'பல முறை மத்திய அமைச்சராக இருந்த உங்கள் தந்தை (சிதம்பரம்) சிவகங்கை தொகுதிக்கு என்ன செய்தார்' எனகேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
இதையடுத்து காங்., தொண்டர்களும், பா.ஜ.,வினரை பார்த்து கோஷம் எழுப்பினர். இதனால், பேச்சை முடித்து கொண்டு காருக்கு கார்த்தி எம்.பி., சென்றபோது, பா.ஜ.,வினர் மோடி வாழ்க... கோ பேக் கார்த்தி' என கோஷமிட்டனர்.
புள்ளிவிபரம் கூறியதால் கோபம்
இது குறித்து கார்த்தி எம்.பி., கூறியதாவது ''தமிழகத்திற்கு மத்தியில் இருந்து என்ன வருகிறது என்ற புள்ளி விபரத்தை தான் கூறினேன். நிதி பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக பேசினால் பா.ஜ.,வினருக்கு கோபம் வருகிறது. அனைத்து அதிகாரமும் டில்லியில் உள்ள ரயில்வே வாரியத்திற்கு சென்றுவிட்டது. இதனால் எந்த திட்டங்கள் குறித்து பேசினாலும் முடிவை ரயில்வே வாரியம் தான் எடுக்க வேண்டும் என கூறிவிடுகின்றனர் என்றார்.
ஆதாரமின்றி பேசும் எம்.பி.,
இது குறித்து பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் கூறியதாவது '' கார்த்தி எம்.பி., ஆதாரமின்றி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கிறார். கடந்த 5 ஆண்டாக பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு ஒன்றும் செய்யவில்லை என்றார். பா.ஜ., ஆட்சிக்கு பின் தான் பல்வேறு மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. அதனை மறைத்து எம்.பி., பேசுகிறார். கடந்த 35 ஆண்டாக மத்தியில் உள், நிதித்துறை அமைச்சர் பதவி வகித்து என்ன செய்தார் சிதம்பரம் என்றார்.
